பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்
பள்ளி மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் – தமிழகத்தில் அதிர்ச்சி தகவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரித்திகா, 11 ஆம் வகுப்பு முடித்திருந்த நிலையில், கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். தற்போது ஆன்லைனில் 12 வகுப்புக்கான பாடங்கள் நடைபெற்று வரும் நிலையில், செல்போன் இல்லாததால் மாணவி ரித்திகா படிக்க முடியாமல் தவித்துள்ளார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித்தர மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரித்திகா, இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிழக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ் ஒன்பதாம் வகுப்பு முடித்திருந்தார். தற்போது ஆன்லைனில் 10 ஆம் வகுப்புக்கான பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கி தராததால், கடந்த ஜுலை 31 ஆம் தேதி மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்துக்கொண்டார்.
நாகை மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவரது மகள் ஹரிணி. நாகை வடகுடியில் உள்ள அமிர்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளி கட்டணம் செலுத்தாததால், மாணவி ஹரிணியை வகுப்பில் பங்கேற்க தனியார் பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளார் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கட்டிடப்பணி ஒப்பந்தகாரரான பாண்டி – மீனா தம்பதி மகனான அபிஷேக் 10-ம் வகுப்பு படித்து வந்தான். ஆன்லைன் வகுப்பு மூலம் வீட்டிலிருந்தே படித்த அபிஷேக், பாடம் சரியாக புரியவில்லை என தனது தந்தையிடம் கூறியதால் அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக், கடந்த 19 ஆம் தேதி பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன் வாங்கித் தராததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்டுக்கொண்டே போகிறது.