ஐபிஎல் போட்டியில் விளையாட நாளை துபாய் செல்கிறது சென்னை அணி
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது. ஹர்பஜன் சிங் தாமதமாக செல்ல உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளை துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன், அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து அவர் துபாய் செல்வார் என தெரிகிறது